ஈரோடு -சத்யமங்கலம் ரோடில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐயனின் ஆலயம் பற்றிய கதை இது.
தம்பி கவுண்டர் என்ற மிகப் பெரிய ஜமீந்தார் அங்கு இருந்தார். அவரிடம் பல மாடுகள் இருந்தன. அவற்றை மேய்பதற்கு அவருடைய சகோதரர் நல்லாயன் என்பவர் அழைத்துச் செல்வார். ஒரு நாள் அந்த கால் நடைகளில் ஒரு பசுவின் மடியில் பால் சுரக்கவில்லை என்பதை நல்லாயன் கண்டார்.அடுத்த நாள் அதை கண்காணித்தார். அது ஒரு புதருக்கு அருகில் சென்று ஒரு பாபு புற்றின் மீது நின்று கொண்டது. அதில் இருந்த நாகப் பாம்பு அதன் பாலை குடித்துக் கொண்டு இருந்தது. அதை தனது சகோதரர் தம்பி கவுண்டரிடம் நல்லாயன் கூறினார். அதை நம்பாத தம்பி கவுண்டர் அவனை நன்றாக அடித்து உதைத்தார். மற்றவர்கள் அவர் அடிப்பதை தடுத்து நிறுத்தி மறுநாள் அனைவரும் தம்பி கவுண்டரின் தம்பியான நல்லாயனுடன் அது உண்மையா என பார்க்கச் சென்றனர். அங்கு நடந்த காட்சியைக் கண்டு பிரமித்தனர். தம்பி கவுண்டர் அநியாயமாக தனது தம்பியை அடித்து விட்டேனே என வருந்தினார். அவரை மற்ற உறவினர் தேற்றினார்கள். அன்று இரவு தம்பி கவுண்டரின் கனவில் அந்த பாம்பு தோன்றி அந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும், அப்படி செய்தால் அவருடைய வருங்கால சந்ததியினரை தான் பாதுகாப்பதாக உறுதி கூறியது. ஆகவே அன்றுஇரவே தம்பி கவுண்டர் அந்த புற்றின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். அந்த இடத்தில் இருந்து வெளிவர மறுத்தார். அவருக்கு அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
அவரை கேலி பேசிய ஒரு மலையாள மந்திரவாதி அவர் சிஷ்யரானார். அது போல ஒரிஸ்ஸாவை ஆண்டு வந்த விஜய கர்ணா என்ற மன்னன் அவர் சிஷ்யரானார். ஒரிஸ்ஸாவில் இருந்து ஒரு வணிகர் தன்னுடைய பேச முடியாத மகளை அங்கு அழைத்து வர அவள் பேசத் துவங்கினாள். அவந்தியில் இருந்து வந்த ஒரு பிராமணக் குருடனுக்கு கண் பார்வை தந்தார். பல காலம் பொறுத்து தம்பி கவுண்டர் இறந்து போக அவரை தெய்வமாகக் கருதி அவரை தம்பி கலை ஐயன் என அழைத்து அவருக்கு ஆலயம் அமைத்தனர்.
ஆலயத்தில் தம்பி கலை ஐயன் வடக்கு நோக்கிப் பார்த்தபடி இருக்க நாகேஸ்வரி அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளாள். அந்த ஆலயத்தில் பல பாம்புகள் சுற்றித் திரிகின்றன . ஆனால் அவை எவரையும் பயமுறுத்துவதில்லை. அங்கு உள்ள பாம்புகளின் எதிரிகளான மயில்கள் கூட பாம்புகளை ஒன்றும் செய்வது இல்லை. நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பின் புறம் நாகலிங்க ஆலயம் உள்ளது. அதன் அபிஷேக நீரை பருகினால் தோல் வியாதிகள் குணமாகி விடுமாம். அது போல பாம்பு கடித்து விட்டவர்களை அங்கு கொண்டு வந்து தம்பி கலை ஐயன் எதிரில் வைக்க அவர்கள் குணமடைகின்றார்களாம் . மணமாகாதவர்கள் நாகேஸ்வரியை வந்து வேண்டிக் கொள்ள திருமணம் ஆகுமாம். தம்பி கலை ஐயன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் அவர் தம்பி நல்லாயனுக்கும் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு பசு பாம்புக்கு பால் வார்ப்பது போன்ற சிலை உள்ளது. பாம்பாட்டி சித்தர், கணபதி, சங்கர நாராயணன், சிவன், விஷ்ணு, திருமூலர் மற்றும் கருப்பண்ணச்சாமிக்கும் ஆலயங்கள் உள்ளன.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தம்பி கலை ஆலயத்துக்கு நிறைய மக்கள் வருகின்றார்கள். பங்குனி உத்திரத்தின் முன் வரும் செவ்வாய் கிழமையில் இருந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரை அந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறும். விழாவின் ஆரம்பத்தில் உற்சவர் சிலைகளை பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரும் நீரால் முதல் நாள் அபிஷேகம் செய்கின்றனர். அடுத்த ஆறு நாட்களும் பொங்கல் படைகப்படுகின்றது. கருப்பச்சாமி ஆலயத்தில் மட்டும் ஆடு பலி தரப்படுகின்றது. பெரிய மாட்டுச் சந்தையும் நடைபெறுகின்றது. கார்த்திகை தினத்தன்று ஒரு லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன
No comments:
Post a Comment