பழங்காலம் முன்பாக தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார்.தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார்.
ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. மருத்துவம்,ஆன்மிகம்,போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவ்விடம் தம்பிக்கலை அய்யன் பாரஸ்ட் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சம தம்பிக்கலை அய்யன் உடன் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நாகசர்பங்கள் வாழும் பகுதியாகவும் ,நாகதோஷம்,கால சர்ப்ப தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் தம்பிக்கலை ஐயன் சன்னதி விளங்குவது சிறப்பாகும். இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால் இடப்புறம் சென்றால் நாகேஸ்வரியின் சன்னதி உள்ளது. நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம்.
சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு .
தம்பிக்கலை அய்யனே சூட்சம நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.நாகேஷ்வரி ஆலயம் முடித்து சென்றால் வேப்பில்லையால் அடித்து திருநீரு மந்திரித்து தீர்த்தம் வரும் பக்தர்களுக்கு தரப்படுகிறது. இங்கு தம்பிக்கலை அய்யன் சிவனுக்கு அபிஷேகம் செய்வது அழகானது.
பின்னர் கள்ளி மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் சன்னதி உள்ளது.பின் கோவில் வலம்வர கருப்பணசாமி சன்னதி அதன் அருகில் அழகான மரங்களுடன் பூங்கா அமைந்துள்ளது. திருக்கோவில் உள்பிரகாரம் அழகானது. நேர்த்தியாக செதுக்கப்பட்ட சித்தர்கள் சிலைகளுடன் முற்றிலும் கருப்பு சலவைக்கற்களால் அழகு படுத்தி இருப்பது சிறப்பு. உள்மண்டபத்தில் கோபுரத்திற்கு மேல் ஒர் கோபுரம் அமைந்திருப்பது மிகச்சிறப்பான ஒன்றாகும் .திருக்கோவிலின் உள்ளே மூலவராக தம்பிக்கலை அய்யன் சிலையாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார் .